வெண்மணலில் தீட்டிய ஓவியம் போல
கண்ணசைவில் ஒரு காவியம் எழுதுகிறாய்
நதியில் வரும் புதுவெள்ளம் போல
இதழசைவில் ஒரு இலக்கியம் எழுதுகிறாய்
செவ்விதழ் இடுக்கில் சிறைப்பட்டிருக்கும்
மோகப் புன்னகையால் ஜாலம் செய்கிறாய்
அமுத கானமாய் அலைய வைக்கும்
காதல் பார்வையில் கவிதை எழுதுகிறாய்
கன்னத்தில் விழுந்து காற்றில் புரளும்
கருங்குழல் ஒதுக்கி நிருத்தம் பயில்கிறாய்
காந்தமாய் இழுக்கும் கருங்கயற் கண்களால்
மேடை இல்லாமல் நாடகம் நடத்துகிறாய்
மூடு பனிக்குள் முகிழ்ந்த முல்லையாய்
புத்தம் புதிய புராணம் எழுதுகிறாய்
யாரும் காணாத காட்டுத் தேனாக
முழுமதி இரவில் சிற்பமாய் ஜொலிக்கிறாய்
மாயக் கண்ணனின் மந்திர கானமாய்
கனவில் வந்து வசியம் செய்கிறாய்
அகில் புகையில் அனுதினம் குளித்த
அழகு தேவதையாய் கவர்ச்சி காட்டுகிறாய்
நின் பாதக்கமலம் பதிந்த இடங்களில்
பூமித்தாயே புல்லரித்துப் போவாள்
மனதை மயக்கும் மதுரப் பேச்சில்
வாயுதேவனே வாயடைத்துப் போவான்
அண்ட சராசரங்கள் ஆயிரங் கோடியிலும்
காண முடியாத கண்மணி நீயே
முப்பது கற்பங்கள் முடிந்து போனாலும்
மறுஜென்மம் எடுத்து மறுபடியும் கரம்பிடிப்பேன்
பி.கு: யுகங்கள் மொத்தம் நான்கு.
1. கிரேதயுகம் (34,56,000 வருடங்கள்)
2. திரேதயுகம் (17,28,000 வருடங்கள்)
3. துவாபரயுகம் (8,64,000 வருடங்கள்)
4. கலியுகம் (4,32,000 வருடங்கள்)
இந்த நான்கு யுகங்கள் கொண்டது ஒரு மகாயுகம். 71 மகாயுகம் கொண்டது ஒரு மனு. 14 மனு கொண்டது ஒரு கற்பம். ஒரு கற்பம் என்பது 429,40,80,000 ஆண்டுகள். இப்படி முப்பது கற்பங்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. முதலாவது கற்பமான வாமதேவ கற்பம் முடிந்து இரண்டாவது கற்பமான சுவதேவராக கற்பம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதிலும் மூன்று யுகங்கள் முடிந்து நாலாவது யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment